தமிழ்நாடு
பாஜகவை எதிர்த்து பேசியதால் திட்டமிட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்: அமமுகவின் சிஆர் சரஸ்வதி!

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் அமமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் தாங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டோம் என சிஆர் சரஸ்வதி கூறியுள்ளார்.
பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்த அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, தேர்தல் பிரச்சாரத்திற்கு நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் என்னுடைய அரசியல் அனுபவித்தில் கணிசமான வெற்றிகளை எதிர்பாத்தோம். இருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தினகரன் கூறியுள்ளார்.
பல குளறுபடிகள் இந்த தேர்தலில் நடந்துள்ளதாக மம்தா கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றிபெறும்போது தேனியில் மட்டும் அதிமுக எப்படி வெற்றி பெறும்? ஆனால் தேனி தொகுதிக்குள் வரும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக எப்படி தோல்வி அடையும்? எங்களது வேட்பாளர்கள் சொல்வது பல பூத்துக்களில் பூஜ்ஜியம் காண்பிக்கிறது என்பதுதான்.
நாங்கள் கணக்கெடுத்துள்ளபடி 1800 பூத்துக்களில் பூஜ்ஜியம் என காண்பிக்கிறது. வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குகள் கூட எங்கே சென்றது? அமமுக வரக்கூடாது என்று திட்டமிட்டு செய்துள்ளனர். நாங்கள் தோற்கவில்லை. பாஜகவை எதிர்த்து பேசியதால் திட்டமிட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்றார் சிஆர் சரஸ்வதி.














