தமிழ்நாடு
நக்கீரன் கோபால் விவகாரம்: முதல்வருக்கே தெரியாமல் தலைமைச்செயலாளர் செய்த காரியம்!

சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் வெளியான ஒரு தகவலை நாம் இங்கு பகிர்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஆளுநர் மாளிகையில் இருந்து மூத்த அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரையில் நக்கீரன் பத்திரிகையில் அது தொடர்பாக வெளியான செய்திகள், மேலும் நக்கீரன் கோபால் சம்பந்தப்பட்ட முந்தைய கோப்புகளை அவசரமாகக் கேட்டதாக கூறப்படுகிறது.
தலைமை செயலாளரிடம் இருந்து பெற்ற அந்த கோப்பை மத்திய உள்துறைக்கு அனுப்பி நக்கீரன் கோபாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வாங்கியது ஆளுநர் மாளிகை. இந்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சமியுடன் கடந்த 5-ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தனது கையில் கொண்டுவந்த கோப்பௌ ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலிடம் கொடுத்துள்ளார். அந்த கோப்பில் என்ன உள்ளது என்பதுகூட முதல்வருக்கு தெரியாதாம்.
அப்போது ஆளுநர், அவரது செயலாளர், முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோர் சில விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர். அதில் ஒன்று நக்கீரன் கோபால் குறித்தது. நக்கீரன் மீது நடவடிக்கை எடுக்க ரெடியாக வைத்திருந்த ஒரு பேப்பரை ஆளுநர் மாளிகையில் முதல்வரிடம் அளித்துள்ளனர். அதுவரை தலைமைச் செயலாளரிடம் நக்கீரன் பற்றிய கோப்பு வாங்கியது, அதை மத்திய உள்துறைக்கு அனுப்பியது, அதற்கு ஒப்புதல் கிடைத்தது என எதுவுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு வராமலேயே நடந்திருக்கின்றன.
இதனையடுத்து வெளியேவந்த பின்னர் இந்தக் கோப்புக் கொடுப்பது பற்றி என்னிடம் நீங்க எதுவும் சொல்லவே இல்லையே? என்று கோபமாக தலைமைச் செயலாளரிடம் முதல்வர் பேசிவிட்டுக் காரில் ஏறி சென்றுவிட்டாராம். இருந்தாலும் ஆளுநர் உத்தரவை தட்ட முடியாமல் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேற முதல்வர் ஒத்துழைப்பு வழங்கியதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
















