வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜூலை முதல் நிலுவை தொகையுடன் வழங்கப்படும்!

7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருவேளை அகவிலைப்படி (DA) நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தின் 55% அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நுகர்வோர் விலைகுறியீட்டு (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
2025 ஜனவரியில் இருந்து 55% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாத நுகர்வோர் விலைகுறியீடு 145 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை 12 மாத சராசரி குறியீடு 143.6 என நிர்ணயிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். புதிய உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் நிலையில், ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.
அத்துடன், தீபாவளிக்கு முன் இந்த உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும். மேலும், பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) தொகைகளும் தானாகவே அதிகரிக்கும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வை மாநில அரசுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











