இந்தியா
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பாஜக: மோடிக்கு ப.சிதம்பரம் சுடச்சுட பதிலடி!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, 356 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது என்று சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து பாஜக எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது குறித்து பேசியுள்ளார்.
சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்திடம், மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்தது குறித்து பிரதமர் மோடி குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் அரசு 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்ததை யாரும் மறுக்கவில்லை. அன்று சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் மக்கள் அன்றே அந்த அரசை தண்டித்திருப்பார்கள்.
தற்போது பாஜக அரசு மாநில அரசுகளை நீக்குவது இல்லை. ஆனால் அதை விட மோசமாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிடுகிறது. ஒரு அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால் கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். சமீபத்தில் கோவாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கியது அனைவருக்கும் தெரியும். ஆப்பரேஷன் லோட்டஸ் என்பதே எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது. மோடி அதை பேசியிருக்கலாமே? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.