கிரிக்கெட்
தோனிக்கு இனிமேல் இந்திய அணியில் இடமில்லை: பிசிசிஐ நிர்வாகி பரபரப்பு பேட்டி!
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சும் அதிகமாக உலா வருகிறது.
தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சுக்கள் வந்தாலும், அவர் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அவரை பிசிசிஐ ஓரம்கட்ட உள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேட்டியளித்துள்ளார். பெயர் சொல்லாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு இந்த சர்ச்சைக்குறிய பேட்டியை அளித்துள்ளார்.
அதில், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னமும் முடிவு பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது. முன்பு போல தோனியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை என்பதை உலகக் கோப்பை போட்டியிலேயே பார்த்தோம். 6-ஆம் நிலை, 7-ஆம் நிலை வீரராகக் களமிறங்கியும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இது அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கிறது. வர உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டியிலும் தோனி தேர்வாக வாய்ப்பில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவரைச் சேர்க்கும் திட்டம் இந்திய அணிக்கு இல்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கெளரவமாக தோனி விடைபெற வேண்டும். இனிமேல் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. அதனால் ஓய்வு பெறுவது குறித்து தோனி அறிவிக்க வேண்டும் என அந்த பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார். இது தோனியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.