செய்திகள்
தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

தென்னிந்தியப் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளை (நவம்பர் 8) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதே சமயம், பிற மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 9-ம் தேதி, தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளிலும், தென் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளிலும் இதே போன்று மிதமான மழை தொடரும் என கூறப்படுகிறது.
🌦️ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலை
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: 33°C
குறைந்தபட்ச வெப்பநிலை: 24-25°C
நாளையும் இதேபோல் மேகமூட்டம் நிலவும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை நிலைமைகள் மாறாது இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



















