செய்திகள்
அடுத்த 7-8 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய பரவலான மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7-8 நாட்களுக்கு இடியுடன் கூடிய பரவலான மழை – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடையும் நிலையில், அடுத்த 7-8 நாட்களுக்கு இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்றிலிருந்து (16.09.2025) 23.09.2025 வரை மாலை, இரவு உள் மாவட்டங்களில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், நான்கு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், சென்னை மற்றும் காரைக்கால் வானிலை ரேடார்கள் பராமரிப்பு பணி விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேசமயம் பள்ளிக்கரணை NIOT ரேடாரையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், இன்று ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.




















