தமிழ்நாடு
1 லட்சத்துக்கு புடவை வாங்கினால் 2 அத்திவரதர் பாஸ் இலவசம்: காஞ்சியில் சூடுபிடிக்கும் வியாபாரம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் காஞ்சியில் அத்திவரதை வைத்து புடவை வியாபாரத்தை சூடு பிடிக்க வைத்துள்ளனர் வியாபாரிகள்.
அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கூட்ட நெரிசலால் இதுவரை 8 பேர் உரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் விவிஐபி பாஸ் மூலம் மிகவும் வசதியாக வந்து பார்த்து செல்கின்றனர். இது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் உள்ளவர்கள் டோனார் பாஸ்கள் என்ற முறையில் ஏராளமான பாஸ்களை அச்சடித்து வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். டோனார் பாஸ் என்ற பெயரில் காஞ்சியை சுற்றியுள்ள பட்டு வணிகர்களுக்கு ஏராளமான பாஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அந்தப் பட்டு வணிகர்கள் தங்களிடம் புடவை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு புடவை வாங்கினால் இரண்டு அத்திவரதர் பாஸ் இலவசம் என்று ஆசை காட்டி, பட்டுப் புடவைகளை விற்றுவிடுகிறார்கள் இதனால் அவர்களின் வியாபரம் சூடுபிடித்துள்ளது. இதனை அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.