ஆரோக்கியம்
ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி: இட்லி, தோசை, சாதத்துக்கும் அற்புதமான ரெசிபி!

ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி – இட்லி, தோசை, சாதத்துக்கும் அட்டகாசமான சைடிஷ்!
இட்லி, தோசைக்கு சட்னி என்றால் எப்போதும் தேங்காய், தக்காளி அல்லது பச்சை மிளகாய் சட்னி தான் செய்வோம். ஆனால் ஒரே மாதிரியான சட்னிகள் சலிப்பை தரலாம். அப்படிப்பட்ட நேரத்தில் காய்கறி சட்னிகளை முயற்சி செய்யலாம்.
பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளால் சட்னி செய்வது பரவலாக அறியப்பட்ட விஷயம். ஆனால் பலரால் பெரிதும் விரும்பப்படாத கத்திரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி சுவையிலும், ஆரோக்கியத்திலும் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துக்கும் அற்புதமாக பொருந்தும்.
👉 தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 250 கிராம்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு, மிளகு – தலா 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கருப்பு எள் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
👉 செய்முறை:
கத்திரிக்காயை நீளமாக நறுக்கி தண்ணீரில் ஊற விடவும். புளியை கரைத்து வைக்கவும்.
சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து வைக்கவும். எள்ளை தனியாக வறுத்து, இரண்டையும் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு தக்காளி சேர்த்து சமைக்கவும்.
கத்திரிக்காயை சேர்த்து மூடி வேக வைக்கவும். வெந்ததும் மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
புளி நீரை சேர்த்து கொதிக்க விட்டு, கடைசியில் அரைத்த எள்–சீரக பேஸ்டை சேர்க்கவும்.
சட்னி கெட்டியாக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
இவ்வாறு சுலபமாக செய்யக்கூடிய ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசை, சாதம் அனைத்திற்கும் சுவையான சைடிஷ் ஆக இருக்கும்.


















