இந்தியா
பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்தும் இந்தியா: புல்வாமா தாக்குதல் எதிரொலி!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குவதால் இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 200 சதவிகிதம் வரி. பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த வர்த்தக ரீதியான சலுகைகள் ரத்து, கலாச்சார நிகழ்ச்சிகள், கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானை ஒதுக்கும் நடவடிக்கை என இந்தியா தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய அரசு, இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி, சட்லஜ் மற்றும் பீஸ் நதிகளின் நீர் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்கள் பயன் பெறும் வகையில் திருப்பிவிடப்படும்.
மூன்று நதிகளின் இடையில் அணை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும், ரவி நதியில் ஷாக்பூர்-கான்ட் அணை கட்டுமானம் தொடங்கிவிட்டதாகவும். யு.ஜே.ஹெச் பணித்திட்டத்தின் மூலம் இந்தியப் பங்கு நீரைச் சேமித்து வைத்து ஜம்மு காஷ்மீரின் தேவைக்குப் பயன்படுத்தப்படும். ரவி-பீஸ் நதியிலிருந்து பாயும் நீர் பிற வடிகால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும். இந்த திட்டங்கள் எல்லாம் தேசிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
















