தமிழ்நாடு
சென்னை கடற்கரையில் தண்ணீரில் குளிப்பவர்களைக் கண்காணித்துக் காப்பாற்ற ட்ரோன்கள் அறிமுகம்!

சென்னை கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் உயிரை காப்பாற்ற ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன், தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழுமம் இணைந்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் பாதுகாப்பு ட்ரோன்கள் சோதனையை நடத்தி உள்ளது.

டிரோன்
இந்த ட்ரோன்கள் சென்னையில் உள்ள கடற்கரையில் குளிப்பவர்களைக் கண்காணிக்கும். மேலும் அவர்கள் தவறுதலாக அடித்துச் செல்லப்பட்டால் இந்த ட்ரோன்கள் அவர்களைக் கண்டறிந்து மிதக்கும் கருவிகளை வழங்கும்.
மேலும் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற புகைப்படத்தையும் எடுத்து அனுப்ப உதவும் என தெரிவித்துள்ளனர்.
பொதுவாகச் சென்னை கடற்கரையில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டால் படகை எடுத்துச் சென்று அவர்களைக் காப்பாற்ற 20 நிமிடம் வரை நேரம் தேவைப்படும். ஆனால் இந்த ட்ரோன்களை பயன்படுத்தும் போது 5 நிமிடத்தில் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மிதவை கருவிகள் வழங்கி காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து ட்ரோன் உதவியுடன் காப்பாற்ற 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் சமாதி முதல் லைட் அவுஸ் வரையில் 5 கிலோ மீட்டருக்கு 6 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.























