தமிழ்நாடு
முதல்வர் அழைப்பை ஏற்று தமிழகம் வருகிறார் ஜனாதிபதி!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து தமிழக சட்டப் பேரவையின் 100-வது ஆண்டு தினம் மற்றும் கருணாநிதி புகைப்பட திறப்பு விழாவிற்கு வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்தை ஆகஸ்ட் 2ஆம் தேதி திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை வர இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரை வரவேற்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் உருவ படம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
சட்டப்பேரவை செயலகம் மூலம் இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெற்று வருவதாக சபாநாயகர் அப்பாவு அவர்கள் செய்தியாளர்களிடம் சற்றுமுன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை வர உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.























