தமிழ்நாடு
உதயநிதி மகன் வந்தாலும் ‘வாழ்க’ சொல்லுவோம்: அமைச்சர் கே.என்.நேரு
தமிழக முதல்வரின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றதற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் உதயநிதி மகன் வந்தாலும் அவருக்கு நாங்கள் ’வாழ்க’ சொல்லுவோம் என அமைச்சர் கேஎன் நேரு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என அந்த கட்சியில் உள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து தொண்டர்களும் விரும்பியதால் நடந்ததாக திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு குடும்பமே திமுகவை கட்டுப்படுத்தி வருகிறது என வானதி சீனிவாசன் உள்பட பல தெரிவிக்கின்றனர். 50 ஆண்டு காலமாக திமுக தலைவராக கருணாநிதி இருந்தார் என்றும், அதன்பின் முக ஸ்டாலின் அதன்பின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்றும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஒரு கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேல் இருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இதேபோல் அதிமுக மற்றும் பாஜகவினர் உதயநிதி அமைச்சரானது குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கேஎன் நேரு தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எல்லோரும் சாதாரண நபர்கள். எங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தது கருணாநிதி அவர்களின் குடும்பம் தான். எங்களை போல் எண்ணற்றவர்களை தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் உருவாக்கிய குடும்பம்தான் கருணாநிதி குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசம் இல்லாமல் நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்க போகிறோம்?
எனவே உதயநிதி அல்ல அவருடைய மகன் வந்தால் கூட அவருக்கு நாங்கள் வாழ்க செல்வோம். எங்களிடம் வாரிசு அரசியல் என்று சொல்லி எங்களை எதுவும் செய்ய முடியாது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தரும் ஒரே இயக்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.