இந்தியா
3 மாநிலங்களில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்

இன்று காலை 3 மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பினேகர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு எழுந்தபடியே வீட்டை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாகவும் வீடுகள் குலுங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர் என்றும் ஆனால் இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு நடந்த நிலநடுக்கம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று அதிகாலை மேகாலயா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேகாலயாவில் இன்று காலை அதிகாலை இரண்டு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் இந்தியாவில் மேகாலயா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் எந்தவித பாதிப்புமில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.





















