தமிழ்நாடு
கணவர் மீது நடவடிக்கை எடுங்கள்: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா போலீசில் புகார்!

நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா தனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தனது கணவர் தன்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் திடீரென மறுநாளே அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என மீண்டும் இணை கமிஷனர் நரேந்திரன் அவர்களை சந்தித்து நடிகை ராதா மீண்டும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதம் 14ந் தேதி எனது கணவரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். இந்த புகார் மீது விசாரிக்க போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாரதி என்னை செல்போனில் அழைத்து போலீஸ் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். இதனால் என்னுடன் காரில் வா என்று அழைத்து சென்று எனது கணவரையும் அழைத்து வந்து சமாதனமாக போகவும். புகாரை திரும்ப பெற்று நல்லபடியாக வாழுங்கள் என்று சப்- இன்ஸ்பெக்டர் பாரதி வற்புறுத்தினார்.
கணவரும் நல்லபடியாகச் சேர்ந்து வாழ்வதாக எழுதி கொடுத்தார். இந்த நிலையில் தொடர்ந்து வசந்தராஜா எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் எழுதி தந்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என வசந்தராஜா கூறினார்.
இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்ட போது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை எனவும், வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்பருதி, பாரதி ஆகியோர் மீதும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை ராதா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.




















