தமிழ்நாடு
தேர்தலில் போட்டியிடுவது உறுதி- அறிவித்தார் வேல்முருகன்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. களத்தில் மோதிக் கொள்ளும் இரண்டு பிரதான கட்சிகளான திமுக – அதிமுக இடையேயான கூட்டணி காய் நகர்த்தல்களும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

குறிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் இரு கட்சிகளும் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இந்த முறை, 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளார். இது குறித்து அவர், ‘தொகுதிகளை கொடுக்கும் இடத்தில் பெரிய கட்சியாக இருப்பது திமுக. எனவே அந்தக் கட்சி எங்களுக்கு எவ்வளவு தொகுதி கொடுக்கும் என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன். நான் இந்த தேர்தலில் களமிறங்குவது உறுதி’ என்று கூறியுள்ளார்.























