தமிழ்நாடு
இந்து கடவுள்களை சாத்தான் என்ற மதபோதகர் மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படை!

கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி லாசரஸ் மிகவும் பிரபலாமனவர். தொலைக்காட்சிகளில் இவரது மத போதனை நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஒளிபரப்பப்படும். இந்நிலையில் இவர் இந்து கடவுள்களை விமர்சித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்ய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சர்ச்சைக்குறிய வீடியோவில் மோகன் சி லாசரஸ், தமிழகத்தில் அதிக அளவில் கோயில்கள் இருப்பதாகவும், குறிப்பாக கும்பகோணத்தில்தான் அதிகளவில் கோயில்கள் இருப்பது ஏன் என்றும் கூறியிருந்தார். மேலும் இந்து மதக் கடவுள்களைச் சாத்தான்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார் அவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கருமத்தப்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை, பூதப்பாண்டி, அஞ்சுகிராமம், கோட்டாறு, சுசீந்தரம், இட்டாமொழி காவல்நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத், குரும்பூர் ஆகிய காவல்நிலையங்களிலும் மோகன் சி லாசரஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ) (1) (ஏ) (பி) மற்றும் 295 (ஏ) ஆகிய பிரிவுகளின் மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மோகன் சி லாசரஸை பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.













