தமிழ்நாடு
சீன் போடுவது யார்?: ஸ்டாலினா? எடப்பாடி பழனிசாமியா?

நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து 11, 12 ஆகிய தேதிகளில் நீலகிரி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் ஸ்டாலின் சீன் போடுவதற்காக நீலகிரி சென்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் விளம்பரப்படுத்துவதற்காக நீலகிரி சென்றுள்ளாரா? தற்போது அவர் எதிர்க்கட்சி. ஆளுகின்ற கட்சியாக அதிமுகதான் உள்ளது. நீலகிரியில் பாதிப்புக்குள்ளான அடுத்த நாளே வருவாய்த்துறை அமைச்சர் அங்கு சென்று பணிகளை மேற்கொண்டார்.
ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் செல்வார். அங்கு சீன் காட்டுவார், பத்திரிகைகளில் பேட்டியளித்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இதனையடுத்தி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.
அப்போது, நான் என்னவோ விளம்பரத்துக்காக சீன் காட்ட நீலகிரி சென்றதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பயணம் செல்லவுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. சீன் காட்ட அவர் செல்கிறாரா என்று சொல்ல நீண்ட நேரமாகிவிடாது. அவரைப் போல முதல்வர் என்ற பொறுப்பை மறந்து பொறுப்பிழந்து இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசும் அளவுக்கு நான் செல்ல மாட்டேன் என்றார் காட்டமாக.

















