இந்தியா
காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி சூடான பதில்: எங்களை சுதந்திரமாக பயணம் செய்ய விட்டாலே போதும்!

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரத்ரேசங்களாக அவற்றை பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கடந்த 10-ஆம் தேதி பேசிய ராகுல் காந்தி, காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன். ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள். இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள் என்றார்.
இந்நிலையில் இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின் அழைப்பை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம். இதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும் என சூடாக பதிவிட்டுள்ளார்.

















