இந்தியா
இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS), 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2002-ல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அறிமுகமானது. தற்போது சுமார் 88% டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் நடைபெறுகின்றன. குறிப்பாக Indian Railways சார்ந்த IRCTC இணையதளம் மற்றும் ஆப், மேலும் கடந்த ஆண்டு அறிமுகமான RailOne மூலம் அதிக அளவில் முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் தற்போதைய 40 ஆண்டுகள் பழமையான PRS அமைப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. புதிய அமைப்பு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. தற்போதைய அமைப்பு ஒரு நிமிடத்திற்கு 25,000 முதல் 32,000 டிக்கெட்டுகள் வரை கையாளும் நிலையில் உள்ளது. புதிய அமைப்பு ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை செயல்படுத்தும் திறன் பெறும்.
புதிய முன்பதிவு அமைப்பு முழுமையாக AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும். இதன் மூலம் பயணிகளுக்கு பல புதிய வசதிகள் கிடைக்கவுள்ளன. முக்கியமாக, தற்போது கடைசி நேரத்தில் தயாராகும் ரிசர்வேஷன் சார்ட்டுகள் இனிமேல் ரயில் புறப்படும் நேரத்துக்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே தயாராகும். இது பயணிகளுக்கு முன்கூட்டியே தெளிவான தகவலை வழங்கும்.
மேலும், AI அடிப்படையிலான வெயிட்லிஸ்ட் கணிப்பு வசதி அறிமுகமாகும். இதன் மூலம் உங்கள் வெயிட்லிஸ்ட் டிக்கெட் உறுதியாகுமா என்பதை சுமார் 94% துல்லியத்துடன் கணிக்க முடியும். இதனால் பயண திட்டமிடல் எளிதாகும்.
ஆதார் சரிபார்ப்பு முறையும் அதிக முக்கியத்துவம் பெறும். ஆதார் இணைக்காத கணக்குகள் டிக்கெட் முன்பதிவில் தாமதத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் போலியான முன்பதிவுகள் குறைக்கப்படும்.
பணம் செலுத்தும் செயல்முறையும் வேகமாகும். அதேசமயம், டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஏற்படும் session expiry பிரச்சனைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RailOne ஆப் தற்போது பயணிகளிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகமான இந்த ஆப், ஒரு ஆண்டிற்குள் 3.5 கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளது. இந்த ஆப்பின் மூலம் தினசரி சுமார் 9.29 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 7.2 லட்சம் அன்-ரிசர்வ் டிக்கெட்டுகள் மற்றும் 2.09 லட்சம் ரிசர்வ் டிக்கெட்டுகள் அடங்கும். அன்-ரிசர்வ் டிக்கெட்டுகளில் பிளாட்ஃபாரம் டிக்கெட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆப் Google Play Store மற்றும் Apple App Store ஆகிய தளங்களில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, புகார் பதிவு மற்றும் சேவை தொடர்பான தகவல்களையும் வழங்குவதால் பயணிகள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மொத்தத்தில், புதிய AI அடிப்படையிலான முன்பதிவு அமைப்பு இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவை வேகமாகவும், பாதுகாப்பாகவும், பயணிகளுக்கு எளிதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















