இந்தியா
இன்று மாலை 6 மணிக்கு கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

கர்நாடகாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நீடித்து வந்த யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் இன்று மாலை 6 மணிக்குடன் முடிவுக்கு வர உள்ளது.
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 99 வாக்குகளையும், எதிராக 105 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தது. இதனால் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் முதல்வராக எடியூரப்பா வருவார் என பரவலாக பேசப்பட்டாலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. ஆலோசனை, கூட்டங்கள் என இந்த முடிவு தாமதமாகிக்கொண்டே போனது. இந்நிலையில் இந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று சந்தித்த எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.























