தமிழ்நாடு
கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அளித்த விளக்கம்!

கொரோனா வைரஸ் இந்தியாவை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.
கோவிட்-19 என்றால் என்ன?
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் கோவிட்-19.
கோவிட்-19 பாதிப்பு எத்தனை நாட்கள் இருக்கும்?
கொரோனா வைரஸ் தொற்றியது முதல், நோயின் பாதிப்பு தெரியும் வரை 14 நாட்கள் இருக்கும்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், வறட்டு இருமல், அசதி, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு போன்றவை கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்று கூறப்படுகின்றன. இவை சாதாரண காய்ச்சலின் போது நமக்கு வரும் அறிகுறிகளே ஆகும். எனவே இது போன்ற அறிகுறிகள் இருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அல்லது மருத்துவரை அனுகுவது சிறந்தது.
கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?
கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்துள்ளவர்கள் தும்மும் போது, இருமும் போது வெளியாகும் நீர்த் துளிகள் வழியே மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படும். கொரோனா வைரஸ் கிருமிகளுள்ள இடத்தை அல்லது பொருட்கள் போன்றவற்றைத் தொட்டுவிட்டு முகம், கண், மூக்கு, வாய் உள்ளிட்டவற்றைத் தொடும் போது கொரோனா வைரஸ் தொற்று எளிதாகத் தொற்றிக்கொள்ளும்.
காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?
தும்மும் போது, இருமும் போதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும். ஆனால், காற்றின் மூலம் பரவாது.
யாரெல்லாம் முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்?
காய்ச்சல் உள்ளவர்கள், சளி, இருமல் உள்ளவர்கள் மருத்துவத் துறையினர் பயன்படுத்தும் மாஸ்க் அணிய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை.
கொரோனா வைரஸ் வந்தாலே இறப்பு நிச்சயமா?
இல்லை, கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் சிகிச்சையிலேயே சரியாகி விடுவார்கள். ஆனால் ஏற்கனவே பிபி(உயர் ரத்த அழுத்தம்), இதய நோய், நீரிழிவு நோய், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதிக பாதிப்புகளை உண்டாக்குமாம்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இல்லை என்றால் சானடைசர் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். கண்களுக்கு மெட்ராஸ் ஐ நோய் போன்று கண்ணாடி அணிந்துக்கொள்ளலாம். கைகளுக்கு கிளவுஸ் அணியலாம்.














