தமிழ்நாடு
மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய கேப்டன் விஜயகாந்த்: காரணம் இதுதான்!

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் பட்டும் படாமல் இருந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.
விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டாலும் தற்போதுவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும் அக்கட்சி கண்டுகொள்ளப்படவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. விரைவில் தேமுதிகவுடன் திமுக அல்லது அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வாய்விட்டு கூறியும் இரு கட்சிகளும் தேமுதிகவை கண்டுகொள்ளாமல் உள்ளன.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால்தான் தேமுதிகவை இரு கட்சிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து விஜயகாந்த் தற்போது களமிறங்கியுள்ளார். இன்று அவர் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கொடி ஏற்றினார். மேலும் ’என் தொண்டர்களையும் என் மக்களையும் சந்திக்க விரைவில் வருகிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளதால் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிரது.
தேர்தல் களத்தில் விஜயகாந்த் தீவிரமாக களமிறங்கினால் கண்டிப்பாக அவருடைய கட்சியை அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டுக்கொண்டு கூட்டணியில் இணைக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது























