தமிழ்நாடு
போட்டிப்போடும் செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும்: கலக்கத்தில் தினகரன்!

அமமுகவில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் தற்போது திமுகவில் இணைந்துவிட்டனர். இவர்கள் இருவரும் தற்போது போட்டிப்போட்டுக்கொண்டு அமமுகவினரை திமுக பக்கம் இழுக்க முயன்று வருவதால் தினகரன் தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் மினி சட்டசபை தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து பலரும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் செல்ல ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக பல முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறுவதால் அமமுக கடுமையான நெருக்கடியில் உள்ளது. ஆனாலும் மீதமுள்ள நிர்வாகிகளையும் திமுக பக்கள் இழுக்க அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.
தங்க தமிழ்செல்வனும், செந்தில் பாலாஜியும் அமமுகவில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள். தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் நெருக்கமாக இருந்தனர். இந்த தொடர்பை பயன்படுத்தி இவர்கள் இருவரும் அமமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பேசி வருவதாக கூறப்படுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை தங்க தமிழ்ச்செல்வனும், கொங்கு பகுதி, திருச்சி, தஞ்சை டெல்டாவில் உள்ள அமமுக நிர்வாகிகளை செந்தில் பாலாஜியும் தொடர்பு கொண்டு திமுக பக்கம் அவர்களை இழுக்க முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த தகவல் தினகரன் தரப்புக்கும் சென்றுள்ளதால் தினகரன் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுக்கு போன் போட்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.




















