கிரிக்கெட்
ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை போராடி வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஏழாவது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
கார்டிஃப் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு குணாரத்னே, குசல் பெரேரா ஜோடி 92 ரன்கள் சேர்த்தனர். ஆனால் தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர் நபியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகினர்.
இலங்கை அணி 144 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழப்பு என இருந்த போது ஆப்கான் வீரர் முகமது நபியின் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. இது ஆட்டத்தை அப்படியே தலைகீழாக புரட்டிப்போட்டது. பின்னர் வந்த இலங்கை வீரர்கள் ஆப்கான் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 3 மணி நேரம் தடைபட்டது.
இதனையடுத்து ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில், முகமது நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆப்கானிஸ்தான் அணியால் இலக்கை அடைய முடியவில்லை. அந்த அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிக பட்சமாக நஜிபுல்லா சத்ரன் 43 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் நுவன் பிரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்றைய போட்டி: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா
இடம்: சௌதம்ப்டன்
நேரம்: 3 மணி




















