சினிமா
அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

சசிக்குமார் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் மீண்டும் இயக்குநராகவும் நடிகராகவும் குறிப்பிடத்தகுந்த அறிமுகத்தைக் கொடுத்தவர் சசிக்குமார். இந்தப் படத்தை அடுத்து 2010-ம் ஆண்டு ‘ஈசன்’ படத்தை இயக்கினார்.
பிறகு ‘கிடாரி’, ‘போராளி’, ‘பேட்ட’, ‘அயோத்தி’ என நடிகராக மட்டுமே இத்தனை காலம் பயணித்தார். தன் கடன் பிரச்சினைகள் காரணமாகவே, அதிக எண்ணிக்கையில் படங்கள் நடித்து வருவதாகவும் இவை தீர்ந்ததும் இயக்கத்துக்குத் திரும்ப இருக்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார் சசிக்குமார். படத்திற்கானப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கிராமத்துப் பின்னணியைக் கொண்டு பீரியாடிக் கதையாக படம் வர இருக்கிறது. ஜீன் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் படம் வெளியிட இருக்கிறார்கள்.