தமிழ்நாடு
தமிழகத்தில் முதல்முறை; வீட்டுக்கே வரும் சுடுகாடு.. ஒரு மணி நேரத்தில் அஸ்தி!
தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டுக்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்பாராத விதமாக ஒருவர் இறந்துவிட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பின் காத்திருந்து அஸ்தியை பெற்றுவரும் நிலைதான் தற்போது உள்ளது.
ஒரு சில கிராமங்களில் மிக தொலைவில் சுடுகாடு இருக்கும் என்றும் அது மட்டுமின்றி சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். மேலும் ஒரு சில கிராமங்களில் சுடுகாடு வசதி என்பது இல்லை என்பதால் அவர்களுக்கு ஏற்ற இடத்தில் பிணத்தை எரித்து விட்டு வரும் நிலையும் உள்ளது.
இந்நிலையில் தற்போது பிணத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில் நடமாடும் சுடுகாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் குறித்த தகவல் கொடுத்துவிட்டால் வீட்டுக்கே மயான வாகனத்தை கொண்டு வந்து சடலத்தை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அஸ்தியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூபாய் 7500 என்றும் இந்த கட்டணத்தை செலுத்தி விட்டால் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து பிணத்தை எரித்து அஸ்தியை கொடுத்து விட்டு சென்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாநகராட்சியுடன் ஆத்மா அறக்கட்டளை என்ற அமைப்பு இதனை செயல்படுத்த உள்ளது என்றும் இந்த நடமாடும் சேவை இயந்திரத்தை உருவாக்க 25 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நடமாடும் மயான சேவையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து மாநிலம் முழுவதும் ரோட்டரி சங்கங்கள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இதை விரிவுபடுத்த உள்ளதாகவும் ஆத்மா அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.