ஆன்மீகம்
புதுச்சேரியில் இன்று இரவு சந்திர கிரகணம் – தொலைநோக்கி பார்வை ஏற்பாடு, கோவில்கள் மூடல் அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று இரவு சந்திர கிரகணம் – பொதுமக்கள் பார்வைக்கு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு, கோவில்கள் மூடல் அறிவிப்பு
இன்று இரவு (செப்டம்பர் 6) வானில் அரிய நிகழ்வான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனை பொதுமக்கள் நேரடியாகக் காண புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை தொலைநோக்கிகள் மூலம் கிரகணத்தை இலவசமாகக் காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வானியல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வை நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.
சந்திர கிரகணம் இன்று இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 11.43 மணி வரை நிகழ உள்ளது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல கோவில்களில் நடை சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் மாலை 5.30 மணிக்கு பௌர்ணமி அபிஷேகம் நடைபெறும், பின்னர் இரவு 7 மணி முதல் நடை சாத்தப்படும்.
மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன், அரியாங்குப்பம் திரவுபதியம்மன், தவளக்குப்பம் முத்தாலம்மன், பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி, அபிஷேகப்பாக்கம் போத்தியம்மன், நோணாங்குப்பம் மன்னாதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்கள் மூடப்படும்.
திருபுவனை தென்கலை வரதராஜ பெருமாள், திருவண்டார் பஞ்சநதீஸ்வரர், சன்னியாசிகுப்பம் சப்தரிஷிகள் மாதா, வராகி அம்மன், காளி கோவில், மதகடிப்பட்டு குழி மகாதேவர், திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி கோவில் ஆகியவை மாலை முதலே மூடப்படும்.
கிரகணம் முடிந்த பின், நாளை (திங்கட்கிழமை) காலை பரிகார பூஜைகள் நடைபெற்ற பின் மட்டுமே கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என கோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.





















