கிரிக்கெட்
5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா த்ரில் வெற்றி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி, ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர்.
கொல்கத்தா 171 ரன்கள்
குர்பாஸ் ரன் எடுக்காமலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதிஸ் ராணா மற்றும் ரிங்கு சிங் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த ராணா 42 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரசல் அதிரடியாக விளையாடி 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 171 ரன்களை எடுத்தது.
கொல்கத்தா த்ரில் வெற்றி
172 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடிக்க ஐதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்களிலும், மயங்க் அகர்வால் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஐதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமாத் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் 3வது பந்தில் அப்துல் சமாத் 21 ரன்களுக்கு கேட்ச் ஆகி அவுட் ஆனார். முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.