சினிமா
‘லியோ’ திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கலா?

விஜய்யின் ‘லியோ’ படம் அறிவித்தபடி வெளியாவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார்.
‘வாரிசு’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படம் நடித்து வருகிறார். நடிகர்கள் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டப் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் காஷ்மீரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு கடந்த வாரத்தில் படக்குழு சென்னை திரும்பியது. இதனை அடுத்து, சென்னை ஷெட்யூல் சில வாரங்களுக்கு நடக்க இருக்கிறது. மே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் அறிவித்தபடி வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நடந்த விழா ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது, “‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் அறுபது நாட்களுக்கான படப்பிடிப்பு உள்ளது. அதுவும் விரைவில் முடிந்துவிடும். படம் அறிவித்தபடி வெளியாவதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது.
படப்பிடிப்பு முடித்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்து அக்டோபர் மாதம் படம் வெளியாகும்” என உறுதி தெரிவித்துள்ளார். மேலும், “‘விக்ரம்’ படத்தில் ‘ஆரம்பிக்கலாங்களா?’ என்ற டேக் ரசிகர்களுக்கு பிடித்தது போல, ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற டேக் இந்தப் படத்தில் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். இது பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.



















