தமிழ்நாடு
அதிகரிக்கும் கொரோனா: முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தும் சுகாதாரத்துறை!
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. பல வகைகளில் இது உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இதன் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்வது மிகவும் முக்கியம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்கள், பார்வையாளர்கள், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறியபோது, தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம் என தெரிவித்துள்ளார்.