தமிழ்நாடு
சென்னையில் விடிய விடிய கனமழை.. நெருங்கும் புயலால் பரபரப்பு
வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது என்பதும் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் இன்று இரவு முழுவதும் மழை பெய்யும் நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இன்று இயங்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பால் உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மகாபலிபுரம் அருகே இன்று மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.