இந்தியா
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: பிப்ரவரி 12ல் நாடு முழுவதும் போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

இந்தியா–அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக, சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM), அதன் அரசியலற்ற பிரிவு, அகில இந்திய கிசான் சபா (AIKS) உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு சமம் என விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், SKM, இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்திற்கு “முழுமையான சரணடைதல்” என விமர்சித்ததுடன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய SKM தலைவர்கள், நாடு முழுவதும் கிராமங்களில் போராட்டங்கள் நடைபெறும் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பொம்மைகள் எரிக்கப்படும் என்றும் அறிவித்தனர். மேலும், பிப்ரவரி 12 அன்று நடைபெற உள்ள பொதுத்தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கும் முழு ஆதரவு தெரிவித்தனர்.
அகில இந்திய கிசான் சபா (AIKS) தலைவர் கிருஷ்ண பிரசாத் கூறுகையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாயம் மற்றும் பால்வளத் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். குறிப்பாக, கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படும் சிவப்பு சோளம், டிஸ்டிலர்ஸ் கிரெயின்ஸ், சோயாபீன் எண்ணெய் போன்ற பொருட்களுக்கு சந்தை திறக்கப்படுவதால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிராந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால், ஏற்கனவே குறைந்த வருமானம் மற்றும் கடன் சுமையில் சிக்கியுள்ள விவசாயிகளை இந்த ஒப்பந்தம் மேலும் பாதிக்கும் என்றார். இந்தியா–அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களும் இந்தியாவுக்குப் பயனற்றவை என அவர் விமர்சித்தார்.
பாரதிய கிசான் யூனியன் (BKU) தலைவர் ராகேஷ் டிகாயத், கிராமப்புறங்களில் இந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறி, அனைத்து விவசாயிகளும் போராட்டத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்தார்.
SKM வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்மை மற்றும் பால்வளத் துறைகள் எவ்வித FTA-விலும் சேர்க்கப்பட மாட்டாது என்ற வர்த்தக அமைச்சரின் கூற்றை இந்த ஒப்பந்தம் முற்றிலும் மறுக்கிறது. விவசாயிகளுக்கு துரோகம் செய்த அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா–அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் முயற்சித்தால், நாடு முழுவதும் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் SKM எச்சரிக்கை விடுத்துள்ளது.
























