தமிழ்நாடு
சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் ஓட்டம்: இரட்டை கொலையில் முடிந்த விபரீதம்
சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் இன்னொரு கைதி ஓடிவிட்டதால் இரட்டைக்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் பல்வேறு வழக்குகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது .
இந்த நிலையில் முதலில் விடுதலையான ஜெகன், மணிகண்டனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். இதனையடுத்து இருவரும் ஓடி விட்டதாக தெரிகிறது .
இதனையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன் ஆத்திரமடைந்து ஜெகனை கொல்ல திட்டமிட்டார். இதை தெரிந்துகொண்ட ஜெகன், தனது நண்பர்களுடன் மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மணிகண்டன் ஜெகனை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜகன் தனது நண்பர்களுடன் பஸ் நிலையம் அருகே மது அருந்தி கொண்டிருந்தபோது, தனது கூட்டாளிகளுடன் மணிகண்டன் ஜெகனை தீர்த்துக்கட்ட முயன்றார்.
ஆனால் மணிகண்டனை பார்த்ததும் ஜெகன் தப்பிவிட்டதாகவும் அவருடைய நண்பர்கள் 2 பேர் மட்டும் மாட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது. ஜெகனின் இரண்டு நண்பர்களையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மணிகண்டன் குழுவினர் தப்பி ஓடிவிட்டனர். மணிகண்டன் மற்றும் ஜெகன் இடையில் ஏற்பட்ட தகராறில் சம்பந்தமில்லாத இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.