இந்தியா
மாநிலங்களவையில் அதிமுக அமளி: இன்று முழுவதும் அவை ஒத்திவைப்பு!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று மாநிலங்களவையை மூடக்கியுள்ளனர் அதிமுக எம்பிக்கள்.
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு காவிரி மேலாண்மை வாரியமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.
இதனையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தைக்கூட்டி அதில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் சம்மதம் இன்றி எந்த கட்டுமானப் பணியையும் கர்நாடக அரசு மேகதாதுவில் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மான நகலையும் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் இது தொடர்பான பதாகைகளுடன் அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் அதிமுக வினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற அலுவலகத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
























