தமிழ்நாடு
தமிழகத்தைப் பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி: சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து பேசிய பேச்சுக்கு திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 30 நிமிடங்கள் வரை சரிவர செயல்படவில்லை.
தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தைப் பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி. அட்சயப் பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக கொறடா சக்கரபாணி கூறும்போது, மறைந்த தலைவர்கள் குறித்து அவையில் மரியாதை இல்லாமல் பேசக் கூடாது என வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவில் பாதபூஜை செய்து பதவி வாங்கிய செந்தில் பாலாஜி உதிர்த்த முத்துகளையே அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார் என கூறினார். மேலும் சபாநாயகர் தனபால் கூறும்போது, அவைக்குறிப்பில் உள்ளதைதான் அமைச்சர் பேசினார் என தெரிவித்தார்.
இதனையடுத்து அமைச்சரின் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜிதான் தற்போது திமுகவுக்கு வந்திருக்கிறார். அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேரவையில் செந்தில் பாலாஜி பேசியதை அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என தெரிவித்தார்.
















