தமிழ்நாடு
41 ஆயிரத்தை தாண்டியது பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேற்று முதல் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கப்பட்டது என்பது நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் மாணவர்கள் பி.ஈ, பி.டெக் உள்பட பல பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்தார்கள் என்பதும் அவர்களில் பெரும்பாலானோர் சான்றிதழ் பதிவேற்றம் செய்து கட்டணமும் கட்டி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளிலும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்றும் இன்றும் சேர்ந்து பொறியியல் படிப்பிற்கு மொத்தம் 41,363 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பொறியியல் படிப்பில் சேர 20,660 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர் என்றும் 13,508 மாணவர்கள் தங்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர் என்றும் தொழில்நுட்ப கல்வியகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 41 ஆயிரத்தை தாண்டி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆகஸ்ட் 14 வரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் இருப்பதை அடுத்து இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























