தமிழ்நாடு
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க கூடாது: கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த கூட்டத்தால் பரபரப்பு!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க கூடாது என உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஜூலை 31 வரை சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது மட்டுமின்றி அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் முழுவதுமே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்பட உள்ளது என்பதும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்றும் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக்கூடாது என்றும் தூத்துக்குடி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த மக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா வைரசால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நீதிமன்றம் தான் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.














