இந்தியா
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி: கொரோனா பாதிப்பு என தகவல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று தான் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான 5 ஆலோசனை வழங்கினார் என்பதும் அந்த ஆலோசனைகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் இன்று அவருக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன்மோகன் சிங் அவர்களின் உடல்நலம் குறித்த அறிவிப்பை மருத்துவமனை இன்னும் சில நிமிடங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



















