தமிழ்நாடு
மீண்டும் இழுபறியில் தேமுதிக தொகுதி பங்கீடு: மாவட்ட செயலாலர்களுடன் அவசர ஆலோசனை!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படவில்லை.
நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் நேரில் சந்தித்து பேசியும் இழுபறி நீடித்து வருகிறது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தேமுதிக தனது மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாளை காலை பத்து முப்பது மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்திற்கு பின்னர் தான் அதிமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பது குறித்து தேமுதிக முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக தரப்பில் இருந்து 15 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கூறப்படுவதால் தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு கட்சி அந்த தொகுதியை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே. இருப்பினும் தேமுதிகவுக்கு மாற்று வழி இல்லாததால் முடிந்தவரை அதிமுகவுடன் அதிக தொகுதிகளை பெற்றுக் கொள்வது ஒன்றுதான் வழி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளைய அவசர ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















