தமிழ்நாடு
“எப்பா ஸ்டாலினு… கருணாநிதி எதுக்கு டெல்லி போவாருனு தெரியுமா..?”- சீறிய எடப்பாடியார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியின் வியூகங்கள் குறித்து இந்த சந்திப்புகளின் போது பேசப்பட்டிருக்கும் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.
இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர், ‘ஆட்சியைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துக்காகவே திடீர் டெல்லிப் பயணம் சென்றார் எடப்பாடி பழனிசாமி. மக்களைப் பற்றியோ, தமிழகத்தைப் பற்றியோ அவருக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. ஆட்சி அதிகாரம் மட்டும்தான் ஒரே குறி’ என சாடினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செங்கல்பட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியைக் காப்பாற்றத் தான் நான் டெல்லிக்குப் போனதாக சொல்கிறார் ஸ்டாலின். நான் டெல்லி சென்றது, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன்.
ஆட்சி அதிகாரத்தை நான் ஏன் காப்பாற்ற வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளா இருக்கிறது ஆட்சி முடிவதற்கு. இரண்டே மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதற்காக யாராவது மெனக்கெடுவார்களா?

மக்கள் நலனுக்காக நான் டெல்லிக்குச் சென்றேன். ஆனால் கருணாநிதி எப்போதெல்லாம் டெல்லி செல்வார் தெரியுமா? தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பதவி அல்லது அதிகாரம் தேவைப்பட்டால் அவர் டெல்லி செல்வார். அதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


















