இந்தியா
யூஸர்நேம் வசதியால் எந்த வித மோசடிக்கும் வாய்ப்பில்லை – வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்தது

வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அமல்படுத்தவுள்ள யூஸர் நேம் வசதி மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இதை அமலுக்குக் கொண்டு வரக்கூடாது என மத்திய அரசு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்தது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது. யூஸர்நேம் வசதி தற்போது அமலில் இல்லை. இந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக அமலுக்கு வர உள்ளது. புதிய வசதியில் பயனர்களின் பாதுகாப்புக்கும் போலி கணக்கு தொடங்குவதை தடுக்கவும் மோசடிகள் நடைபெறுவதை தவிர்க்கவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
பிரபலமான நபர் நிறுவனங்கள் பெயரில் போலி யூஸர் நேமை பெறுவதற்கு தற்போது சிலர் முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலில் உண்மையில்லை. அத்தகைய பிரபலமான பெயர்கள் அணைத்தும் மெட்டா வசமே உள்ளன. உண்மையில் சம்பந்நதப்பட்ட பயனர்தான் அந்த பெயரைக் கோருகிறாரா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அப்பெயரை மெட்டா வழங்கும். இதனால் போலி கணக்கு தொடங்கப்படுவது தடுக்கப்படும்.
வாட்ஸ் ஆப் செயலிக்கு பயனர்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். யூஸர்நேம் வசதியைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
புதிதாக யாரும் உங்களுக்கு செய்தி அனுப்ப வெண்டுமெனில் உங்களின் சரியான யூஸர்நேமை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதேபோல் எத்தனை புதிய பயனர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படும். வேறு யாருடைய யூஸர்நேமை பயன்படுத்த திரும்ப திரும்ப மர்மநபர் முயற்சித்தால் தானாக அது முடக்கப்பட்டுவிடும். யாரும் முதன்முதலில் செய்தி அனுப்பினால் அவர் புதிய பயனரா என்பது திரையில் காண்பிக்கப்படும். அவருடைய எண் அவர் வெளிநாட்டுக்காரரா 2 பேரும் ஒரே குழுவில் உள்ளீர்களா என்ற விவரமும் காட்டப்படும். அதை வைத்து நீங்கள் அவருக்கு பதில் அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.











