இந்தியா
சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

ஒரு சராசரி மனிதர் 73 ஆண்டுகள் வரை வாழும் நிலையில், ஒரு மருத்துவர் 58 ஆண்டுகள் வரை மட்டுமே வாழ்வார் என எதிர்பார்க்கப்படுவதால், மருத்துவர் சங்கங்கள் அவர்களின் வாழ்க்கைமுறையை ஓராண்டு காலம் ஆய்வு செய்து rல வழிகாட்டு நடவடிக்கைகளை வகுத்திருக்கின்றன.
இந்தியாவில் ஒரு மருத்துவர், சராசரி ஆயுட்காலத்தை விட 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழக்கிறார் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) சமீபத்திய தேசிய ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும், இத்தொழிலில் காணப்படும் அதிகப்படியான மனச்சோர்வு, மனநலப் பிரச்சினைகள் மற்றும் உடல் உபாதைகளையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 12 மாதங்கள் நீடித்த இந்த குறுக்குவெட்டு ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 1,537 மருத்துவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இதன் முடிவுகள் நமக்கு வெளியிட்ட தகவல்கள் இதோ..
இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் 73.6 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், மருத்துவர்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் வெறும் 58.1 ஆண்டுகளாக மட்டுமே உள்ளது – இது 15 ஆண்டுகளுக்கும் மேலான குறைவு என ஓர் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. “பிறரைக் குணப்படுத்துவதால் ஏற்படும் சுமை மிகவும் அதிகம். நம்மைக் குணப்படுத்துபவர்களை நாம் குணப்படுத்த வேண்டிய நேரம் இது,” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன் கூறினார்.
தரவுகளின்படி, பரிசோதிக்கப்பட்ட மருத்துவர்களில் 22.2 சதவீதம் பேருக்கு மனச்சோர்வும், 23.3 சதவீதம் பேருக்கு பதட்டமும், 2.8 சதவீதம் பேருக்கு தற்கொலை எண்ணங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. பணிச்சோர்வின் அளவுகள் அதிகமாக இருந்தன; 49.6 சதவீத மருத்துவர்கள் கடுமையான பணிச்சோர்வையும், 39.1 சதவீதத்தினர் மிதமான பணிச்சோர்வையும், வெறும் 11.3 சதவீதத்தினர் மட்டுமே குறைந்த பணிச்சோர்வையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
உடல் ரீதியாகவும் இதன் தாக்கம் கவலை அளிப்பதாக உள்ளது. 51.8 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் தூக்கக் கோளாறுகள் இருப்பதாகவும், 32.1 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், 24.2 சதவீதம் பேருக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாகவும், 21.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயாலும், 19.4 சதவீதம் பேருக்கு அதிக கொலஸ்ட்ராலும், 16.8 சதவீதம் பேர் உடல் பருமனுடனும் இருப்பதாகத் தெரிவித்தனர்.
மனச்சோர்வு, மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை, முறையற்ற உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான வேலைப்பளு ஆகியவை பொதுமக்களுடன் ஒப்பிடும்போது ஒரு மருத்துவரின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதற்கான சில காரணங்களாகும்.
மருத்துவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அந்தச் சங்கம் வலியுறுத்தியது.
“மருத்துவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. அதிக மன அழுத்தம், நீண்ட வேலை நேரம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன,” என்று டாக்டர் அசோகன் கூறினார்.
பல மருத்துவர்கள் சட்டரீதியான அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் பணியிடத் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் ஐஎம்ஏ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தக் காரணிகள் மனநலப் போராட்டங்களை அதிகப்படுத்தி, மனச்சோர்வுக்கு வழிவகுக்கின்றன.
கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மன அழுத்தத்தைக் குறைத்து வேலை-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்துவதற்காக, சிறந்த பணிச்சூழல், மனநல ஆதரவு, சுகாதாரக் காப்பீடு, நல்வாழ்வுத் திட்டங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் ஆகிய நடவடிக்கைகளை ஐஎம்ஏ முன்மொழிந்துள்ளது.
“பிறர் மீது அக்கறை காட்டுபவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. நமது மருத்துவர்கள் மீது நாம் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது,” என்று டாக்டர் அசோகன் கூறினார்.











