இந்தியா
வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் ஒரு செயலியாகும். தற்போது இதன் மூலமாக ஒருவர் மற்றொருவருக்கு தகவல்கள் பரிமாறும்போது பயனர்களின் செல்போன் எண்ணை பரஸ்பரம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறாக கைப்பேசி எண்களைப் பகிராமலேயே மின்னஞ்சல்களில் உள்ளது போல யூஸர் நேம் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்மிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பயனர்களின் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு குழு தகவல் பரிமாற்றம் அல்லது புதிய பயனர்களிடம் உரையாடுதல் போன்ற நிகழ்வுகளின்போது ஏற்கனவே உள்ளபடி கைபேசி எண்களைப் பகிராமல் யூஸர்நேம் அடிப்படையில் தகவல் பரிமாற்ற வசதியை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கான முன்பதிவு இந்த வாரமே தொடங்குவதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி போலிக்கணக்குகள் மற்றும் மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்பதால் மக்களின் பாதுகாப்பிலும் சமூகத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது, இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை மூன்று நாட்களுக்குள் அனுப்பிட அறிவுறுத்தி மத்திய அரசு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சைபர் குற்றங்கள் கண்டறியும் முயற்சிகளின் போது இந்த நடைமுறை சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இது குறித்து ஆய்வுகளுக்கு பின்னரே அனுமதிக்க இயலும். அதுவரை இந்த முயற்சிகளை இந்தியாவைப் பொறுத்தவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு மெட்டா நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.













