செய்திகள்
ஓய்வூதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு – அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்!

சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தங்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) அமலில் உள்ளது. இதை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர்கள் அடங்கிய குழு நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், கலந்து கொண்ட சங்கங்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெளிவாக தெரிவித்தன. இதற்கிடையே, மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (Unified Pension Scheme) அமல்படுத்த முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், பழைய ஓய்வூதிய திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகிய மூன்றிலும் எது அரசு ஊழியர்களுக்கு ஏற்றது என்பதை ஆராய தமிழக அரசு முடிவு செய்தது.
இதனை ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை துணை செயலர் பிரக்திக் தயாள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அடங்கிய குழு கடந்த பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகமெங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஜனவரி 6 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தவும் பல சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஓய்வூதிய திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கவுள்ள முடிவுகள் மீது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.














