தமிழ்நாடு
செந்தில் பாலாஜி அரசியல்வாதியல்ல, அரசியல் வியாபாரி: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் திருவிழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று அந்த பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜியை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, இந்த இயக்கத்துக்கே செந்தில் பாலாஜி துரோகம் செய்கிறார். அவர் எப்படி மக்களுக்கு உண்மையாக நன்மை செய்வார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி ஓர் அரசியல்வாதியல்ல. அவர் ஓர் அரசியல் வியாபாரி. எங்கு வியாபாரம் நடக்குமோ அங்கு கடைபோட்டு வியாபாரம் செய்பவர்தான் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி என்றார் பழனிசாமி.
செந்தில் பாலாஜி கடந்தமுறை அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் அவர் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுக்க சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தற்போது அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே செந்தில் பாலாஜியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் வியாபாரி என விமர்சித்துள்ளார்.


















