செய்திகள்
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முதல் உதவி – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

திருப்பத்தூரில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ₹517 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ₹174.39 கோடியில் 90 திட்டங்களை திறந்து வைத்தார். மேலும் ₹68.76 கோடி மதிப்பிலான 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதற்குப் பிறகு ₹273.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1 லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதற்கிடையே நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இன்னும் சிலர் தவறவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முதல் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என உறுதியளித்தார்.
மேலும், ஜூலை 15 முதல் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நிகழ்வில், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தவறிய மகளிர் புதியதாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது 2 நாள் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பயணத்தின் போது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆம்பூரில், பொதுமக்கள் மத்தியில் நடந்தபோது, அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தும், உற்சாகமாக கையசைத்தும் மகிழ்ச்சியூட்டினார்.
















