வணிகம்
8வது ஊதியக்குழு: CGHS திட்டம் முடிவடையுமா? புதிய சுகாதார திட்டம் வருகிறதா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு சுகாதார திட்டமான CGHS நிறைவடையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. CGHS என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தும் ஒரே பிரதான திட்டமாகும்.
புதிய ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துடன் மட்டுமல்லாமல், அவர்களின் நலவசதிகளையும் முழுமையாக மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குகிறது. அந்த வகையில், கடந்த சில ஊதியக் குழுக்கள் CGHS-க்கு மாற்றாக புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன.
இப்போது, “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் (CGEPHIS)” என புதிய திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என Financial Express வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது. இந்த திட்டம் CGHS-க்கு மாற்றாக காப்பீட்டு அடிப்படையில் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
CGHS திட்டத்திற்கு பல இடங்களில் போதிய வசதிகள் இல்லை என்பதையும், அதன் பயன்பாடுகள் எல்லா ஊழியர்களுக்கும் எளிதாக கிடைக்கவில்லை என்பதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் பரிந்துரைக்கப்படுகிறது.
இதுவரை, அரசு தரப்பில் இதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவ சேவையில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும்.















