உலகம்
11,000 ஊழியர்கள் பணிநீக்கம்: வோடபோன் நிறுவனம் அதிரடி!
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிற்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வோடபோன் நிறுவனமும் பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
பணி நீக்கம்
கொரோனா வைரஸ்த் தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரின் விளைவாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால், பல ஆயிரம் ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
வோடபோன்
அவ்வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலத் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான மார்கெரிட்டா டெல்லா வால்லே, இந்த பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
வோடபோன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால், பல ஆயிரம் ஊழியர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். மேலும், இதுபோன்ற பணி நீக்க நிகழ்வுகள் இனி தொடரும் என்பதால், சம்பளத்திற்கு பணிபுரியும் ஊழியர்கள் பயத்தில் உள்ளனர். வேலையை நம்பித் தான் பல ஊழியர்கள், தங்களின் குடும்பத்தை சீராக நடத்தி வருகின்றனர். வேலையிழப்பால், இனி இவர்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறி தான்!