ஆன்மீகம்
தை அமாவாசை அன்று பௌர்ணமி தோன்றிய நிகழ்வு!

முன்பொரு காலத்தில் தஞ்சை நகரை ஆண்டு கொண்டிருந்த சரபோஜி மன்னர், தை அமாவாசை நாள் அன்று, திருக்கடையூர் அபிராமி அன்னையை தரிசிக்க வந்திருந்தார். அங்கு வந்திருந்த அனைவரும் மன்னருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் அன்னை அபிராமியின் தீவிர பக்தரான அபிராமி பட்டர், பக்தியில் மெய்மறந்து இருந்த தருணம் அது. பித்தன் என்று பலராலும் நினைக்கப்பட்டு இருந்த அவரைப் பற்றி பலரும் மன்னரிடம் அவதூறு பரப்பினர். மன்னரும் அபிராமி பட்டரை நோக்கி “பட்டரே, இன்று என்ன திதி என்று அறிவீரா?” என்று சோதிக்கும் விதத்தில் கேட்டார்.
அபிராமி பட்டரோ அம்மையின் தெய்வீக முகத்தை கண்டு பக்தி மயக்கத்தில், இன்று பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். மன்னர் திரும்பவும், “இன்று இரவு முழு நிலவு வருமா?” என்று கேட்க, அபிராமி பட்டரோ, “ஓ நிச்சயம் வருமே” என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அப்படியெனில், இன்று இரவு முழு நிலவு வரவில்லை எனில் உமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறிச் சென்று விட்டார். பட்டரின் முகத்தில் எவ்வித கலக்கமும் இல்லை.
அன்று இரவு நேரம் வந்தது; மக்களும் வந்து கூடினர். அமாவாசை தினத்தில் பௌர்ணமி நிலவு வரும் என்று எப்படி கூறினீர்கள்? இப்போது பௌர்ணமி நிலவு தோன்றாவிட்டால் உம்மை தீயில் இட்டு கொளுத்தி விடுவோம் என்று கோபத்துடன் கூறினார் அரசர். பட்டரோ வானத்தையே நோக்கி கொண்டிருந்தார். தீயின் முன்பு பட்டரை நிறுத்தினர். அப்போதும் மனம் உருகி அபிராமி அந்தாதி பாடலை பாடினார் பட்டர்.
அன்னை அபிராமிதேவி, பட்டரின் பக்தியை உலகறிய செய்ய, தன்னுடைய தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினாள். அது பௌர்ணமி நிலவாக மிளிர்ந்தது. சரபோஜி மன்னர் மற்றும் மக்கள் மிரண்டு போயினர். அபிராமி பட்டரின் பக்திக்கு கிடைத்த பரிசு அது. தை அமாவாசை தினத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியது போல் இருந்தது அந்த நிகழ்வு. அபிராமி பட்டர் விடுவிக்கப்பட்டார்; அவர் பக்தி காலத்தால் அழிக்க முடியாததாக மாறியது.
வாழ்க்கையில் எப்பேர்பட்ட கஷ்ட காலங்கள் நிகழ்ந்த போதிலும், பட்டரைப் போல அன்னை அபிராமி தேவியின் அபிராமி அந்தாதி பாடலை மனம் உருகி பாடி வந்தால் அவளின் அனுக்கிரகம் நிச்சயம் கிட்டும்.
ஆயுள் கண்டத்திலிருந்து அபிராமி பட்டர் மீண்டு வந்த தினம் இன்று. ஆதலால் இன்றைய நாள் இறை வழிபாட்டிற்கு மற்றும் திருக்கடையூர் அன்னை அபிராமி தேவியின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.














